darkerblisscraft-blog
darkerblisscraft-blog
Darker Bliss Craft
11 posts
Organizer. Music lover. Beer ninja. Future teen idol. Web junkie. Food scholar. Friend of animals everywhere.
Don't wanna be here? Send us removal request.
darkerblisscraft-blog · 8 years ago
Text
பிக்பாஸ் கங்காணி ஆகலாம்... நீங்கள்லாம் ஏன் அடிமை ஆகணும்? 86-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
86-ம் நாள் விடிந்தது.
முந்தைய நாள் விளையாடிய பலூன் விளையாட்டில் பட்ட காயத்துக்கு இன்னும் மூன்று நாட்களுக்குத் தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம் எனும் அளவ��க்கு போட்டியாளார்கள் சோர்வில் இருந்திருப்பார்கள். ஆனாலும் ’சின்சியர்’ பிக் பாஸ் காலை எட்டு மணிக்கே 'வேக் அப் ஸாங்' ஒலிக்கவிட்டார். ’இறுதிச்சுற்று’ படத்திலிருந்து ரித்திகா சிங்கின் அசத்தல் சென்னை ஆட்டத்தில் ’அஞ்சுநூறு தாளை பாத்து ஆட்டம் போடுறா’ பாடல் ('அஞ்சாறு பாயிண்ட்டுக்கு ஆட்டம் போடுறாங்க ஹவுஸ்மேட்ஸ்' என்றும் கொள்ளலாம்!). 
சுஜாவும் கணேஷூம் வெளியில் வந்து ஆடத்தொடங்கியிருந்தனர். ஹரீஷ் காலைத் தூக்கமுடியாமல் விந்திவிந்தி நடந்துவந்தார். ’இனி காலையில் ஒலிக்கும் பாடலுக்கு அனைவரும் கண்டிப்பாக  ஆட வேண்டும்’ என்ற விதிமுறை விதிக்கப்பட்டுள்ளதால் வேறு வழியில்லாமல் ஹரீஷும் ஆட வேண்டிய நிலை. அனைவருக்குமே பாயின்ட் முக்கியம் என்பதால், ஆட ஆரம்பித்து இருந்தனர்.
 கால் வலி காரணமாக 'இந்தியன்' சீனியர் கமல் களிமண்ணில் ஆடுவது போல், இடுப்புக்கு மேலே மட்டும் ஷேக்கி ஷேக் செய்து ஆடியதாக கணக்கு காட்ட முயற்சித்தனர்  (பாயிண்ட் முக்கியமாச்சே.. முட்டி ஜாயிண்ட் கழண்டதைப் பார்த்தா முடியுமா?). கணேஷ் மட்டும் தான் கோவாவிற்கு பிக்னிக் வந்திருக்கும் அங்கிள் போல், டவுசர் அணிந்து கொண்டு ஜாலியாக ஆடினார். ஆனால், நடக்கும்போது வலிமிகுதியால் தாங்கி தாங்கி நடந்த சுஜா, ஆடும்போது மற்றவர்களைவிட இயல்பாகவே நடனமாடினார். உண்மைய சொல்லும்மா.... உனக்கு போர்டுல அடிபட்டுச்சா இல்லையா?!
சிநேகனும் ஆரவ்வும் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ’மெண்டல் சேலஞ்சுனா ஓகே... பிசிக்கல் சேலஞ்சுனா முடியவே முடியாது’ என்றார் ஆரவ். சிநேகனும் வழிமொழிந்து ‘நம்மளை ரொம்ப சோதிக்குறாங்க. வெளில இருக்குற மக்கள் தினமும் நிறைய மக்களை சந்திக்கிறாங்க… பல விஷயங்கள்ல அவங்களை ரிலாக்ஸ் பண்ணிக்குறாங்க. 
அவங்களால இதை பண்ணமுடியும். ஆனா நூறு நாள் ஒரே வீட்டுக்குள்ள இருக்குறவங்க மனநிலை எப்படி இருக்கும்னு யோசிக்கணும். ஒரே இடம், ஒரே சூழ்நிலை...’ என்றெல்லாம் ஏகத்துக்கும் அங்கலாய்த்தார். ஆனால், ஹவுஸ்மேட்ஸிடம் இப்படியெல்லாம் பேசிவிட்டு, பிக்பாஸ் கூப்பிட்டதும் ஓடிச் சென்று 'சொல்லுங்க எசமான்.... உத்தரவு எசமான்.... செஞ்சுப்புடலாம் எசமான்!' என்றெல்லாம் முதல் ஆளாக ஆமாம் சாமி போடுவது என்ன லாஜிக் கவிஞரே..!?    
**
ட்ரிங்.. ட்ரிங்…!
பிக் பாஸ் வீட்டுக்குள் புதியதாக ஒரு பழைய மாடல�� டெலிஃபோன் வைத்திருந்தார்கள். அதில் வரும் அழைப்பு மூலம் இனி ஒவ்வொருவருக்கும் தனித்தனி டாஸ்க். (அதுவும் நல்லதுதான் ஒருநாள் முழுக்க ஒரே டாஸ்க் என்பது கொஞ்சம் சலிப்பூட்டுவதாகத்தான் இருக்கிறது. அதிலும் அந்த டாஸ்க்குகளுக்கு பிக்பாஸ் வைத்த பெயர்கள் எல்லாம் ' நாந்தாண்டா உங்க அப்பன் பேசுறேன் ' என டப்பிங் பட டைட்டிலாகவே இருந்தது....ரண கொடூரம்!). டெலிஃபோன் ஒலித்ததும் யார் முதலில் ஃபோனை எடுக்கிறார்களோ அவருக்கான டாஸ்க் அதில் சொல்லப்படும். 
அதுதான் இந்த ட்ரிங்.. ட்ரிங். முதல் அழைப்பை ஹரிஷ்  எடுத்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க், போட்டியாளர்களில் ஒருவரைத் தேர்வு செய்து அவரது தலைமுடியின் ஒரு பகுதியில் கலரிங் செய்யவேண்டும். இந்த டாஸ்க்கை செய்து முடித்தால் இருவருக்கும் சேர்த்து 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதை இருவரும் எப்படி வேண்டுமோ அப்படி பிரித்துக்கொள்ளலாம். போனில் இதையெல்லாம் கேட்ட ஹரீஷிடம் என்ன என்ன என்று எல்லோரும் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஸ்டோர் ரூம் மணி ஒலிக்க, சிநேகன் உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கலரிங் கிட் எடுத்து வந்தார். 'இது எதுக்கு' என்று சிநேகன் புரியாமல் பார்க்க.. 
அதான் டாஸ்க் என்று விளக்கினார் ஹரீஷ். உடனே சுஜா தனக்கு ஓ.கே. என்றார். இருந்தாலும் அனைவரிடமும் ஒருமுறை கேட்டுவிடுகிறேன் என்று ஹரிஷ் சென்றார். அது பெரிய மனுஷத்தனமாக தோன்றியது. ஆனால், அதற்காக மூடிய பாத்ரூமில் பிஸியாக இருந்த கணேஷ், ஆரவ்விடம் டாஸ்க்கை விவரித்தது....உங்க சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லையா ஆபிசர். அவர்களும் பாத்ரூமுக்குள் இருந்தபடியே, 'என்ன கலர்.... எவ்வளவு நேரம்?' என்றெல்லாம் டெக்னிக்கல் டீடெய்ல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். முடிலடா சாமி!
ஒருவழியாக சுஜாவே ஹரிஷின் கலரிங் பார்ட்னர் ஆனார். பர்கண்டி சாயலில் சுஜா கூந்தலில் கலரிங் செய்யத் துவங்கினார் ஹரிஷ். அதைப் பார்த்த போது அமைதியாக இருந்த ஆரவ், பின்னர் சினேகன் அண்ட் கோவிடம் 'அது ஏதோ சிவப்பு கலரா இருக்கு.... முடி என்ன ஆகுமோ தெரில!' என்று வம்பளத்துக் கொண்டிருந்தார்.  
** இரண்டாவது ட்ரிங்.. ட்ரிங்…
இம்முறை ஃபோனை எடு���்தது சிநேகன். அவருக்கான டாஸ்க், ஆரவ்வை கன்வின்ஸ் செய்து அவருடைய ஒரு கால் ஒரு கையில் வேக்ஸிங் செய்ய வேண்டும். அதாவது காலில் வேக்ஸ் தாளை ஒட்டி இழுத்து காலில் இருக்கும் மொத்த முடியையும் பிடுங்க வேண்டும். யப்பா நினைத்தாலே மயிர்கூச்செறிகிறது. 'ரைட்டு இது வில்லங்கம்!' என்பதை உணர்ந்த சிநேகன் எடுத்த எடுப்பிலேயே ‘தம்பி உன் கால்ல விழுகுறேன்டா.. 
நான் ஒரே ஒரு டாஸ்க் சொல்றேன்.. செஞ்சுக்கிறியேடா’ என்று ஆரவ்விடம் பம்மி��ார். ஆரவ் டாஸ்க் என்ன என்று தெரிந்து கொண்டதும், 'கஷ்டம் ப்ரோ. இதுக்கு நீங்க கன்வின்ஸ் பண்ணித்தான் ஆகணும்!' என்றபோது சிநேகனுக்கு லேசாக ஜெர்க் அடித்திருக்கும். பிக்பாஸும், 'மாப்பு....வைச்சுட்டோம்ல ஆப்பு' என்று குஷியாகி இருப்பார். ஆனால், அங்கு ஆரவ் வைத்தார் ட்விஸ்ட். 'பிக்பாஸ் சொல்லிட்டார்... 
பண்ணிருவோம்... அவர் இன்னும் என்ன சொன்னாலும் பண்ணிருவோம்' என்று சம்மதித்தார்.  இந்த டாஸ்க்கிற்கும் பத்து பாயின்ட். இருவரும் பேசி பிரித்துக்கொள்ளவேண்டும். 'நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்' என்று பிக்பாஸ் சொல்ல, இருவரும் சரிசமமாக பிரித்துக்கொள்வதாகச் சொன்னார்கள். இதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. எப்படிப் பார்த்தாலும் இதில் சிநேகனின் பங்கு குறைவுதான் எனும்போது ஏன் அவருக்கு சரிசமமான பாயிண்டை ஆரவ் விட்டுக்கொடுக்கவேண்டும்? ஆனால், அதற்கெல்லாம் இருவரும் அலட்டிக் கொள்ளாமல், மயிர் நீக்கும் பணியில் மும்முரமானார்கள்.  
அந்த பக்கம் பாயிண்ட் பிரிக்கும் பஞ்சாயத்து சுஜா ஹரிஷூக்கும் வந்தது. “எனக்கு 6... உங்களுக்கு 4 ஓக்கேவா” என்று ஹரீஷ் சொல்ல… “இல்லல்ல எனக்கு 6 உங்களுக்கு 4” என்று சுஜா சொல்ல.. “அதாங்க நானும் சொல்றேன் எனக்கு 6 உங்களுக்கு 4 சரிதானே” என்று ஹரிஷ் வம்பிழுத்தார். பின் கேமரா முன் இருவரும் சிரித்துக்கொண்டே ஆளுக்கு 5 பாயிண்ட் எடுத்துக்கிறோம் என்று சொன்னார்கள்.
 ‘அதெல்லாம் முடியாது எனக்குதான் அதிக பாயிண்ட்ஸ் வேணும்’ என்று அடித்துக்கொள்வார்கள் என்று நினைத்து இப்படி ஒரு ஐடியாவை பிடித்திருப்பார் பிக்பாஸ். ஆனால் பிக்பாஸ் குடும்பம்தான் விக்ரமன் படங்கள் வழிவந்த குடும்பமாச்சே. 'எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவோம்' என்று எதையும் சமாளித்தார்கள். 'வட போச்சே' என்று நொந்து போனார் பிக்பாஸ்.
இதற்கு நடுவில் ஆரவ் - சிநேகன் தங்கள் டாஸ்க்கை தொடங்கியிருந்தார்கள். வேக்ஸிங் அனுபவமுள்ள பிந்து அவர்களுக்கு வழிகாட்டியாக ஒளிகாட்டினார். மருத்துவமனைகளில் ஊசி குத்துவதற்கு முன்னால் ஊசியைப் பார்த்ததும் குழந்தைகள் கத்தி அமர்க்களம் செய்வார்களே, வேக்ஸ் தாள் காலில் ஒட்டப்பட்டதுமே அப்படி ஒரு அமர்க்களத்தை நிகழ்த்தினார் ஆரவ். 
‘பாப்பாவுக்கு ஐஸ்கிரீம் புடிக்குமா? சாக்லேட் புடிக்குமா?’ என்று நர்ஸ்கள் குழந்தைகளிடம் பேச்சுக்கொடுத்து வலி மறக்கச் செய்வதுபோல், 'நமக்கு நிறைய வேலை இருக்கு... அதெல்லாம் எப்படி முடிக்கப் போறோம்.... அங்க பார்க்காத' என்று ஆரவ்வை திசை திருப்பிக் கொண்டிருந்தார் பிந்து. பொண்ணுக்கு தங்க மனசு! ஆனால், சிநேகன் இப்படியெல்லாம் மெனக்கெடவில்லை. 
ஆரவ் காலில் தாள்களை ஒட்டி சர்ரக்... சர்ரக்கென்று தேய்த்து இழுத்துவிட்டார். ஆரவ்வும் அதை சகஜமாக எடுத்துக் கொண்டார். காலுக்கும், கைக்குமாக பிக்பாஸ் கொடுத்த வேக்ஸிங் தாள்களை காலுக்கு மட்டுமே செலவழித்துவிட்டு, 'ஆங்... கைக்கு இன்னும் பேப்பர் கொடுங்க' என்று பிக்பாஸுக்கு டாஸ்க் கொடுத்தார் ��விஞர்.
காலில் இருக்கும் முடியெல்லாம் இழந்தபிறகு தன் கால் பளபளப்பாகிவிட்டதாக அங்கலாய்த்துக்கொண்டார் ஆரவ். 'அப்படியே ஒரு கொலுசு மாட்டினா பொம்பளப் புள்ள கால் மாதிரியே இருக்கும்ல,... கொலுசும் கொடுத்துவிடுங்க பிக்பாஸ்' என்று ஆரவ் சொல்ல… 'இந்தா இருக்கே!' என்று தன் கொலுசை கழட்டிக் கொடுத்தார் பிந்து மாதவி . 
ஆரவ்வும் அந்த கொலுசை மாட்டிக்கொண்டு ஜாலியாக பிக்பாஸ் கேமராவிற்கு போஸ் கொடுத்தார். கண்ணகிதான் கால்சிலம்பை கழட்டிக் கொடுத்ததாய் படித்திருக்கிறோம். இங்கு 'மாதவி' கால்கொலுசைக் கழட்டிக் கொடுத்த காட்சி.... ஐயகோ....இப்படிலாம் யோசிச்சு எழுத வைச்சுட்டியே பாஸூ...பாஸு... பிக்பாஸு! ஆனாலும். ஒரு சந்தேகம் எழாமல் இல்லை. காயங்களில் ஒட்டிய பேன்டேஜை பிரிக்கும்போதே வலி உயிர் போகுமே.. ஆனால், ஆரவ் எப்படி சிரித்துக்கொண்டே இருந்தார் எனத் தோன்றியது.
ஒருமுறை என் நண்பன், 'பெண்களுக்கு சாஃப்ட் ஸ்கின். அதனால்தான், வேக்ஸிங் செய்யும்போது ஓவரா கத்தறீங்க!' என அவன் அக்காவிடம் ஆணாதிக்கத்தனமாகப் பேசியிருக்கிறான். 'அப்படியா,,, இரு வாரேன்!' என்று அக்கா அவன் முகத்தில் ஒரு வேக்ஸிங் தாளை ஒட்டி 'வரட்'டென இழுத்திருக்கிறார். 
எருமை மாட்டுக்கு சவால் விடும் சருமம் கொண்ட நம் நண்பன் துடிதுடித்துப் போய்விட்டான். ஆனால், அப்படியாக ரியாக்‌ஷன் காட்டாமல் ஆரவ் இருந்ததைப் பார்க்கும்போது, அவர் மாடல் என்பதால் வேக்ஸிங் பரிச்சியம் இருக்கும் என்றும் தோன்றியது. பிந்து மாதவி இப்படியெல்லாம் ஆறுதல் அளித்தால், ஒரு கால், ஒரு கைக்கு என....தாடி, முடி என மொத்தமாகவே வேக்ஸிங் செய்து கொள்ளலாம் என்றும் தோன்றியது!
ஒரு கால் முடிஞ்சது. டாஸ்க் படி ஒரு கைக்கும் வேக்ஸ் செய்ய வேண்டும். அதுவரை பஞ்சாயத்து எதுவும் எழவில்லை. உடனே பிக்பாஸ் 'ஆரவ்... கைக்கு செய்யும் முன் உங்கள் மதிப்பெண்களை மறுபரிசீலனை செய்துகொள்ளலாம்' எனக் கொளுத்திப் போட முயற்சித்தார். ஆனாலும், 'சொன்ன சொல்லைத் தவறமாட்டான் இந்த கோட்டைச்சாமி.
 ஆளுக்கு 5 மதிப்பெண்களே இருக்கட்டும்!' என மலர்ந்தருளினார் அருள்வள்ளல் ஆரவ். ஒருவேளை ஓவியா வீட்டுக்குள் இருந்திருந்தால், 'ஆரவ்... பாயிண்ட்டுக்காக இப்படிலாம் பண்ணனுமா.... ஃபிஷ்... அதெல்லாம் வேண்டாம். மாட்டேன்னு சொல்லிரு... வாட் த ஹெல்!' என்று பொங்கியிருப்பார். ஆனால், கூண்டுக்குள்ள பச்சக் கிளிதான் இல்லையே...ஹ்ம்ம்..!
டைனிங் ஹாலில் ’Strategy’ கணேஷ், இந்த டாஸ்க்கை எப்படி செய்தால் வலிக்காமல் செய்யலாம் என்கிற ‘ஆக்சுவலா பாத்திங்கன்னா..’  ஐடியாக்களை சுஜாவிடம் பகிர்ந்து கொண்டிருக்க.. அவருடைய பாடி லாங்குவேஜை வைத்தே கணேஷ் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருப்பார் என்று ஆரவும், பிந்துவும் கிண்டலடித்துக்கொண்டிருந்தார்கள். ஒருவரை இமிடேட் செய்யும் இந்த விஷயத்தில் 'ட்ரிக்கர்' சக்திக்கு அடுத்து ஆரவ��, பிந்துதான் செம்ம!
**
மூன்றாவது ட்ரிங்… ட்ரிங்…
இந்த முறை போனை எடுத்தது கணேஷ். எடுத்ததும் “ஹலோ பிக்பாஸ் ஹவுஸ்” என்றார். பிக்பாஸையே கலாய்க்கிறாராமாம்.  யாராவது ஒருவரை கன்வின்ஸ் செய்து அவருடைய நான்கு ஜோடி காலனிகளை வெட்ட வேண்டும் என்பது அவருக்கு விதிக்கப்பட்ட டாஸ்க். பிந்துவும் ஆரவ்வும் ஜகா வாங்க, சுஜா ஒப்புக்கொண்டார். 'எனக்கு என்ன பாயிண்ட் கொடுப்பீங்க?' என்று கணேஷை ஆழம் பார்த்தார் சுஜா. 
'10 மதிப்பெண்களை ஆளுக்கு 5 -ஆ  பிரிச்சுக்கலாம்!' என்று கணேஷ் சொல்ல, சின்ன ஏமாற்றத்துடன் ஏற்றுக் கொண்டார். சுஜாவின் செருப்புகளை கணேஷ் வெட்டத்தொடங்க, பிந்துவும் ஆரவ்வும் வழக்கம்போல ‘ஆக்சுவலா பாத்திங்கன்னா இந்த ஷூவை இப்படி வச்சு கட் பண்ணனும்ங்க’ என்று கணேஷை ஓட்டினார்கள். தன் செருப்புகளை வெட்டும்போது சுஜா, ‘கேமரால காட்டிகாட்டி கட் பண்ணுங்க Buddy’ என்றார். 
ஏன்மா அவரு என்ன கிச்சன் ஷோல சிக்கனையா கட் பண்றாரு? ஆனால், கணேஷ் செருப்பை வெட்ட வெட்ட....'ஐம் ஸாரி... ஐம் ஸாரி' என்று சுஜா கெஞ்சிக் கொஞ்சியது....பச்ச மண்ணுய்யா! பச்ச மண்ணாக இருந்தாலும் அனைத்து டாஸ்க்குகளிலும் பங்கெடுத்து புள்ளிகளைக் குவிக்க வேண்டும் என பரபரத்துக் கொண்டே இருந்தார் சுஜா. அதனால், எந்த டாஸ்க் என்றாலும் 'ரை ரைட்' சொல்லி ஒப்புக் கொண்டார். இதை ஒரு மூலையில் இருந்து அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார் சிநேகன். 
ட்ரிங்… ட்ரிங்…
இப்போது சுஜா போனை எடுத்தார். அவருக்கான டாஸ்க் யாரையாவது கன்வின்ஸ் செய்து அவருடைய முகத்தில் பெயிண்ட் செய்ய வேண்டும். அடுத்த அறிவிப்பு வரும்வரை அவர் முகத்தை கழுவக்கூடாது. கொஞ்சம் ஈசியென்று நினைத்ததால் எல்லாருமே ஆர்வம் காட்டினார்கள். அதிலும் சுஜாவுடன் தனக்கு வாய்க்கா வரப்பு தகராறு இருந்தாலும், முதல் ஆளாக கை தூக்கினார் சிநேகன். ஆனால், அவரை கண்டுகொள்ளாமல்  சுஜா கணேஷைத் தேர்வு செய்தார்.  
டாஸ்க் தொடங்குமுன், ‘நினைவிருக்கட்டும் அடுத்த அறிவிப்பு வரும்வரை பெயிண்ட் அப்படியே இருக்க வேண்டும் கழுவக்கூடாது’ என்று மீண்டும் ஒரு முறை டாஸ்க் விதிகளைப் புரியவைத்தார் பிக்பாஸ். சுஜா, கணேஷ் முகத்தில் பெயிண்ட் செய்யத் தொடங்கினார். இந்த சமயத்தில் பிந்து சிநேகனிடம் ஒரு பாட்டு பாடுங்க என்று சொன்னதுதான் தாமதம்… அந்நியன் படத்தில் வரும் ரயில் காட்சியைப் போல சங்கீத காலாட்சேபம் செய்தார்கள். ஐய்ய்யயோ..!
**
மீண்டும் ட்ரிங்… ட்ரிங்..
ஆரவ் இம்முறை போனை எடுத்தார். யாரையாவது கன்வின்ஸ் செய்து ஒரு நாள் முழுக்க தரையில் அமரச் செய்ய வேண்டும். படுக்கையிலோ.. சோபாவிலோ… அமரக்கூடாது. அவர்கள் தரும் பாயில்தான் படுக்க வேண்டும். சிநேகன் இந்த டாஸ்க்கை ஏற்றுக்கொண்டார். வழக்கம்போல ஆளுக்கு 5 மதிப்பெண்கள் எடுத்துக்கொண்டார்கள். ஒரு டவுட்டு… கன்வின்ஸ் பண்றதுனா முடியாதுனு சொல்றவனை ஒப்புக்க வைக்குறதுதானே. ஆனால், இங்கோ, 'டாஸ்க்கா... நாந்தான் இருக்கேன்ல!' என்று பறக்கிறார்கள். பிறகு ஏன் கன்வின்ஸ் செய்யச் சொல்கிறார் பிக்பாஸ்?
** 'அடுத்த டாஸ்க்தான் வந்துடுச்சே... நான் ம���க்கப்பை கலைத்துவிடலாமா? அல்லது அடுத்த அறிவிப்புக்குக் காத்திருக்க வேண்டுமா?' என்று குழம்பினார் கணேஷ். பிக் பாஸிடமே கேட்டார். பதில் இல்லை. சுஜாவோ, 'அடுத்த அறிவிப்புனுதான் சொன்னாங்க. அப்படின்னா information. அதான் வந்துருச்சே!' என்றார். சிநேகன் குழப்பியும் குழப்பாமலும் ஒரு விளக்கம் கொடுத்தார். அது கணேஷை இன்னும் குழப்பியது. 
ஒருவழியாக கணேஷ் தன் முகத்தை கழுவினார். ஆனால் அவர் விதிமுறையை மீறியதற்காக அவருக்கு 5 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக அறிவித்தார் பிக்பாஸ். ‘நாந்தான் உங்ககிட்ட கேட்டேன்ல. அரைமணி நேரம் வெயிட் பண்ணேன். ஏன் பதில் சொல்லலை?’ என்று பிக் பாஸின் மீது கோபப்பட்டார். நியாயமான கோபம்தான். சுஜா தான் தான் சரியாக புரிந்துகொள்ளாமல் தவறு செய்துவிட்டதாக மன்னிப்புக் கேட்டார். 
'Its ok. he wanted to play like this. let him play' என்று அதிருப்தியைக் காட்டிவிட்டு அமைதியாகிவிட்டார் கணேஷ். வேறு எந்த வம்பும் சிக்காததால், பிக்பாஸ் வலிந்து கணேஷுக்கு அநீதி இழைத்திருக்கிறார் என்றுதான் தோன்றியது. **
பிந்து ‘ரொம்ப கூட்டம் கம்மியா இருக்குல’ என்று ஃபீல் பண்ண சிநேகன், “வையாபுரி போனதுல இருந்து ஒரு நாளே நீளமா இருக்கு” என்று ரிலேட்டிவிட்டி தியரி பேசினார். ஆம், உண்மையில் வையாபுரியின் வெளியேற்றம் என்பது அவர்களுக்கு ஒருவகையில் ஈடுசெய்யமுடியாதது தான். பிக்பாஸ் டீமில் எல்லோருக்கும் காஃபி போட்டு அந்த நாளுக்கான டாஸ்க்கிற்கு இவர்களை தயார் செய்யும் பணியில் இருந்தார் வையாபுரி. 
அதிலும் வையாபுரியை மிஸ் செய்வதை ஒரு வார்த்தையில் சுள்ளென உணர்த்தினார் பிந்து. 'நமக்கு இன்னும் வையாபுரி ஹேங்க் ஓவர் இருக்கு!' அட்றா சக்க.... பொண்ணுகிட்ட கத்துக்கங்க பாய்ஸ்!
போன் வருகிறது. மீண்டும் கணேஷ் தான் போனை எடுத்தார். யாராவது ஒருவரை கன்வின்ஸ் செய்து மர்ம உணவு வகைகளை சாப்பிட வைக்கவேண்டும்.
 கணேஷ் முழுமையாக சொல்லி முடிக்கும் முன்பே பிந்து கைதூக்கினார். “நீ சைவமாச்சே அதுல அசைவம் வந்தா சாப்பிடுவியா?” என்று கணேஷ் கேட்க.. இந்த ஐடியா நமக்கு தோணாமா போச்சே என்று பிக்பாஸே நினைத்திருப்பார். ஆனால் வந்தது அதைவிட கொடூரம். பாகற்காய், இஞ்சி, வேப்பிலை என விநோதமான காம்போ.
ஒட்டுமொத்த டீமின் ஆரவாரத்தோடு பிந்து மாதவி சாப்பிட ஆரம்பித்தார். முதலில் பாகற்காயில் இருந்து ஆரம்பித்தார் பிந்து மாதவி. ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் போக, ஒவ்வொன்றிற்கும், ஒரு பெயர் வைத்து அழைத்து, விழுங்க ஆரம்பித்தார்.  கணேஷ் மூலிகை டாக்டராகவே மாறி இருந்தார். 'வேப்பிலையை கடைசியா சாப்பிடுங்க செமிக்கும்.. 
இஞ்சியை அப்படியே சாப்பிடுங்க!' எனச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஹரிஷ் 'பாட்டுப்பாடவா ' பாடலைப் பாட ஆரம்பிக்க, பிந்து நடனமாடிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தார். யூடியூபில் குழந்தைகளை எலுமிச்சையை சாப்பிட சொல்லி, அவர்களின் முக ரியாக்ஷனை பதிவு செய்வார்கள். அதற்கு சற்றும் குறைவில்லாமல், ரியாக்ஷன்களை அள்ளி வழங்கிக் கொண்டு இருந்தார் பிந்து மாதவி. 'விருந்தாளி' பிந்து மாதவி இப்படியொரு படையலை எதிர்பார்த்திருக்க மாட்டார்.
 பல நாட்கள் கழித்து, பிக்பாஸ் டீமில் இருக்கும் அனைவரும், ஒருவர் வெல்ல உற்சாகப்படுத்தியது இதில் தான். இந்த டாஸ்கிற்கு மட்டும் பிந்து 8, கணேஷ் 2 என பிரித்துக்கொள்ளலாம் என ஹரிஷ் ஐடியா கொடுத்தார்.
விநோதமான காம்பினேஷன், தொட்டுக்கா அயிட்டங்களை மெயின் டிஷ்ஷாக சாப்பிட்டது எல்லாம் சேர்ந்து பிந்துவுக்கு குமட்டலை உண்டாக்கியது. கையில் பிளாஸ்டிக் பையுடன் இருந்த ஆரவ், பிந்து குமட்டும்போது, அதில் ஏந்திக் கொண்டார். தொடர்ந்து குமட்டினாலும் சளைக்கவில்லை பிந்து.
 கடைசிவரை சாப்பிட்டார். அதிலும் கடையில் இஞ்சியை சாப்பிடும்போது, 'ஏப்பம் வரும்... கசக்கும்... பீ கேர்ஃபுல்!' என்றெல்லாம் கணேஷ் ஆறுதல் சொல்ல, ஒரே கல்ப்பில் இஞ்சியை விழுங்கிவிட்டு பிந்து கொடுத்த அந்த சூப்பர் ஸ்மைலி ரியாக்க்ஷன்..... 'சார்.... பிந்து சார்....!' என்று பிந்து ஆர்மியினரை உற்சாகப்படுத்தியிருக்கும்.
**
அடுத்த அழைப்பை சிநேகன் எடுக்கிறார். ஆரவ், ஹரீஷ் இருவரில் யாருக்காவது க்ளீன்ஷேவ் செய்ய வேண்டும் என்பது அடுத்த டாஸ்க். ‘ரெண்டு பேர்ல யார்னாலும் பண்ணலாம். ஆனா நான் ஃபர்ஸ்ட் ஆரவ்ட்ட கேட்கிறேன்’ என்று சிநேகன் தன் சாணக்கியதனத்தைக் காட்டினார். அவர் ஹரீஷை வேண்டுமென்றே ஓரம் கட்டுவதாகத் தெரிந்தது.
 'மொட்டை போடக் கூட ரெடி' என்று முன்னரே சொல்லியிருந்த ஆரவ், இதற்கா சளைக்கப் போகிறார். உடனே ஒப்புக்கொண்டார் . இம்முறையும் ஆளுக்கு 5 மதிப்பெண்கள். அவ்வளவு செலவழித்து, ஓட்டு வாங்கி ஜெயித்த எம்.எல்.ஏக்களை ஒரே நாளில் தகுதி நீக்கம் செய்ததுபோல பொசுக்குனு இந்த மார்க்கெல்லாம் செல்லாதுனு சொல்லிட்டா ஆரவ் நிலைமை என்னாகும்! ஒரு நாள் கூத்துக்கு மீசை எடுத்த கதையாகிப்போய்விடும்.  மீசை தாடி இல்லாமல் ஆரவ்வைப் பார்க்க காற்று வெளியிடை பட கார்த்தி போல இருந்தது.
**
சிநேகனும் பிந்துவும் தரையில் அமர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் போல் ஆலோசனைக் கூட்டம் போட்டார்கள்.  'பிந்து போன் எடுக்கும்போது ஒருவர் பெயரைச் சொல்லி டாஸ்க் சொன்னால் மட்டும் அவர்களோடு சேர்ந்து செய்யுங்கள். யாரைவேண்டுமானாலும் தேர்வு செய்யலாம் என்று சொன்னால் என்னையோ ஆரவையோ தேர்ந்தெடுங்கள். 
நமக்குள் பாயிண்ட்களைப் பிரித்துக்கொள்ளலாம்' என்றார் சிநேகன். என்ன போங்காட்டம் இது. இன்றைய நாளின் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு டாஸ்க்கிலும் பிந்து, ஆரவ், சிநேகன் மூவரும் தங்களுக்குள்ளாக மட்டுமே டாஸ்க்கை பகிர்ந்துகொண்டார்கள். இந்த க்ரூப்பிசத்தை ஆண்டவர்தான் தட்டிக்கேட்க வேண்டும்.
**
இரவு 9 : 45 க்கு மீண்டும் ஒரு அழைப்பு. ஆரவ் எடுத்தார். 'இவனை நாள் முழுக்க வச்சு அடிச்சாச்சு. இதுக்கு மேல தாங்க மாட்டான்' என்று பிக்பாஸே பாவம் பார்த்து ஜாலியான டாஸ்க் ஒன்றைக் கொடுத்தார். ஆரவ் ஒருவரை கன்வின்ஸ் செய்து அவருடன் பாடிக்கொண்டே டான்ஸ் ஆட வேண்டும். அடுத்த அறிவிப்பு வரும்வரை பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருக்க வேண்டும். உடனே.. “ப்ரோ நான் கூட டான்ஸ் ஆடுறேன்” என்று ஹரீஷ் கையைத் தூக்கினார். ஆரவ் அம்புட்டு லூஸா என்ன? பிந்துவைத் தேர்ந்தெடுத்தார்.
ஆரம்பித்தது சாவல். ஆரவ்வும் பிந்துவும் சளைக்காமல் மாறிமாறி பாடிக்கொண்டும் ஆடிக் கொண்டும்.... ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தார்கள். 'சொக்கா.... சொக்கா.... எனக்கு இல்லை... எனக்கு இல்ல...!' என்ற நாகேஷின் மனநிலை....'வட போச்சே' என்ற வடிவேலுவின் மனநிலை.... இரண்டின் கலவையாக இந்த ஆட்டம் பாட்டத்தை பார்த்து உள்ளுக்குள் பொருமலுடன் உலவிக் கொண்டிருந்தார் கவிஞர்.
ரொமான்ஸ் பாடல்களாக பாடிக் கொண்டிருந்துவிட்டு, ஒரு கட்டத்தில் பிந்து வெறுத்துப் போய்… “பிக்பாஸ்.. இது நியாயமா நியாயமா” என்று கேட்டார் பிந்து. டான்ஸ்ங்ற பேர்ல ஆரவ் பண்றது மட்டும் நியாயமா பிந்து? பிந்து  நாளின் ஆரம்பத்தில் ஆரவ்வுக்கு கொடுத்த கொலுசை மீண்டும் மாட்டவில்லை போல, ஒற்றை சிலம்புடன் ச்சே... கொலுசுடன் (ஆனால் அது சிலம்பு போல் தான் இருந்தது) ஆடிக்கொண்டு இருந்தார்.
யார் யார் இதுவரை எத்தனை மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னார் பிக்பாஸ். ஆரவ் - 20, சுஜா - 18, சிநேகன் - 15, கணேஷ் - 14,  பிந்து - 10, ஹரிஷ் - 8. ** நாளின் இறுதியில் மீண்டும் போன்கால். நம் வீடாக இருந்தால், ‘இந்த நேரத்துல எவன்டா போன் பண்றான்?’ என்று திட்டியிருப்பார்கள். ஆனால் இது பிக்பாஸ் வீடாச்சே. பாயிண்டு  பாயிண்டு. சிநேகன் எடுத்தார். அவருக்கான டாஸ்க்... அகல்விளக்குகள்! அதை  இரவு முழுக்க அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விடிய விடிய சிவராத்திரிதான். பேச்சுத்துணைக்கு பிந்து அல்லது சுஜாவை வைத்துக் கொள்ளலாம் என ஐடியா கொடுத்தார் பிக்பாஸ். 
ஆனால், அதை முதலில் வெளிப்படையாக தெரிவிக்காமல், பிந்துவுக்கு வாய்ப்பு  கொடுப்பதாகச் சொன்னார் சிநேகன். சட்டென சுதாரித்து, 'பிந்துவால முடியலைன்னா சுஜாவை சேர்த்துக்கிறேன். உங்க ரெண்டு பேர்கிட்டயும் கேட்கச் சொன்னார் பிக்பாஸ்' என்றார். பிந்து ஓகே சொல்ல, அகல்விளக்கு டாஸ்குக்கு ஆயத்தமானார்கள். 'ரெண்டு பேர்ட்டயும்தானே கேக்கச் சொல்லிருக்காங்க. ஆனா, என்கிட்ட கேக்காமலே பிந்துவை சேர்த்துக்கிட்டது சரியா?' என்று ரெளத்ரமாக இருந்தார் சுஜா. நியாயம்தான்!
சிநேகன் ஏற்றி வைத்த அகல்விளக்குகளைத் தவிர, வீட்டின் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டது. இரவு முழுவதும் இருக்கும் டாஸ்க் என்பதால், இதற்கு 20 பாயின்ட் வேண்டும் என எஜமானர் பிக்பாஸிடம் முறையிட்டார் பிந்து மாதவி. சிநேகன் அதையே ' எங்க பிக் பாஸ் நல்ல பிக்பாஸ்' என வேறு மோடில் கேட்டுக் கொண்டு இருந்தார். 
ஆனால், இரவு முழுக்க விளக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கப் போகும் சிநேகனுக்கு காலையிலேயே 'இனி பெட் இல்லை பாய் மட்டும்தான்' டாஸ்க் கொடுத்தது எல்லாம் பிக்பாஸ் ஒரு தீர்க்கதரிசி என்பதைக் காட்டியது. ' நீங்க இந்த வாரம் சேஃப் ஆவீங்க பாருங்க' என மக்களின் வாய்ஸ் எப்படி இருக்கும் என சிநேகன் பிந்துவுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டு இருந்தார்.
கவிஞரும் பிந்து மாதவியும் விளக்கை அணையாமல் காப்பார்களா? அல்லது இரவில் பிக்பாஸ் எல்லாரையும் எழுப்பிவிட்டு, விளக்கை அணைக்கச் சொல்லும் டாஸ்க்கை அவர்களுக்கு கொடுப்பாரா!?
இந்த இடத்தில் பிக்பாஸூக்கு ஒரு கேள்வி... 'சிகையை நீக்கு என தோற்றத்தை குலைக்கும், இஞ்சி, வேப்பிலை என சாப்பிடச் சொல்லி அசெளகரியம் உண்டாக்கும் பணிகள் மூலம் போட்டியாளர்களை மன/உடல்ரீதியாக துன்புறுத்துவது டீ எஸ்டேட் கங்காணிக்கே சவால் விடும் போக்காக இருக்கிறதே...!? 
 போட்டியாளர்கள் ஏ.சி வீட்டில் சொகுசாக இருந்தால் நிகழ்ச்சி எப்படி சூடுபிடிக்கும் என நினைத்தால், சுவாரஸ்யமான சவால்களை அளிக்கலாமே..! இப்படி பார்வையாளர்களின் ரசனையை தரமிறக்குவது....நிச்சயம் சரியில்லை!'
பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு கேள்வி... 'என்னதான் போட்டியென்றாலும் சில விஷயங்களை செய்ய மாட்டேன் என அனைவரும் ஒற்றுமையாக பிக்பாஸை எதிர்த்தால் என்ன...? எதையோ செய்து புள்ளிகளை அள்ளிக் கொள்ளலாம் என்ற மனநிலை...சரியா? இந்த இடத்தில்தான் மனசுக்குப் பிடிக்காததை செய்ய மாட்டேன், பிடித்ததை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் செய்வேன் என்று திமிறிய ஓவியாவுக்குக் குவிந்த ஆதரவைப் புரிந்து கொள்ள முடிகிறது. சுவாரஸ்ய சவால்களை எவ்வளவும் எதிர்கொள்ளலாம்....அடிமைத்தனங்களை அல்ல!
0 notes
darkerblisscraft-blog · 8 years ago
Text
ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம் - வெற்றுக் கூச்சலா, வெற்றிப் பாய்ச்சலா ? - அத்தியாயம் 3
Tumblr media
அத்தியாயம் -1
அத்தியாயம் -2
அத்தியாயம் - 03 - அழியும் பாப்பிகொண்டலா, அழும் கோதாவரி !
முந்தைய நாள் இருந்த குளிர் அடுத்த நாள் போலவரம் கிளம்பும் போது இல்லை. வெயில் சற்று உக்கிரமாகவே இருந்தது. அப்போது ரேடியோவில் , " கோதாவரி " படத்திலிருந்து ஒரு பாடல் ஒலிபரப்பானது....
" கோதாரம்ம கும்கம்பொட்டு திட்டி மிரப எருப்பு   லங்கானாதுடினக்கா ஆகனன்டு பன்ட்லு கொருக்கு    சூஸே சூப்பு ஏம் செப்பினிதி சீத காந்தகி     சந்தேஹாலா மப்பே பட்டே சூஸி கண்டிகி      லோகம் காணி லோகம்லோனா ஏகாந்தாலா வலப்பு        அல பாப்பிகொண்டலா நலுப்பு கடகலேகா நவ்வு தனக்கு ராகா... "
இந்த வரிகளின் அர்த்தத்தை கட்டுரையின் முடிவில் காணலாம். அது தான் சரியாகவும் இருக்கும். கோதாவரி ஒரு ஆவணப்படம் அல்ல. 2006ல் அந்தப் படத்தை நான் பார்த்தது இன்றும் நினைவிலிருக்கிறது. அது ஒரு அழகான காதல் படம். கோதாவரி ஆற்றில் பத்ராச்சலம் போகும் ஒரு படகுப் பயணமும், அந்தப் பயணத்தில் வரும் பல கதாபாத்திரங்களின் கதைகளும் தான் படத்தின் கதை. இதனூடே, கோதாவரி ஆற்றின் அழகை அவ்வளவு நேர்த்தியோடு பதிவு செய்திருக்கும் அந்தப் படம். படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கோதாவரியில் ஒரு பயணம் போக வேண்டுமென்ற பேராசையை உருவாக்கும். சரி... இப்போது நம் கதைக்கு வருவோம். இந்த வரிகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் " பாப்பிகொண்டலா " நம் கதையின் முக்கியக் கதாபாத்திரம்.
Tumblr media
இந்தப் பயணத்திற்கான தரவுகளைத் திரட்டிக் கொன்டிருக்கும் போது ஒரு நாளிதழில் இந்தச் செய்தி கிடைத்தது. "போலவரம் திட்டம் தொடங்கப்பட்டதால் விரைவில் பாப்பிகொண்டலா மலைப்பகுதி முழுவதும் அழியப்போகிறது. அதற்கு முன்னர் கடைசியாக அந்த அழகைப் பார்த்திட ஆந்திர மக்கள் கோதாவரியில் படகுப் பயணம் மேற்கொள்கின்றனர். ஒரு நாளைக்கு 1500லிருந்து 2000 பேர் வரை படகுக்கான முன்பதிவைச் செய்துள்ளனர். பாப்பிகொண்டலா ஆந்திரத்தின் கோதாவரியின் மேல் நெஞ்சம் நிமிர்த்தி, நேர் கொண்ட பார்வைப் பார்க்கும் அழகிய மலைத் தொடர். ஆந்திர மக்கள் வழிபடும் இயற்கை தெய்வம். போலவரம் திட்டத்தால், இந்த மலைத் தொடர் முற்றிலும் அழிய இருக்கிறது. இந்த மலைகளைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதிவாசிகள், இந்த மலையை ஒட்டி வாழ்ந்துவரும் தலித் மக்கள் என இந்தத் திட்டத்தால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர வேண்டியிருக்கிறது. இந்தத் திட்டத்தால் இவர்களுக்கு ஏதொரு பயனும் இருக்கப் போவதில்லை. ஆனால், இந்தத் திட்டத்திற்கான காவு இந்த குரலற்ற ஒடுக்கப்பட்ட இயற்கைப் பிள்ளைகள்.
இவர்களின் கதைகளும், குரல்களும் அரசாங்கங்களுக்கு ஒருபோதும் பிடிப்பதில்லை. அந்தக் கதைகளைப் பின்னர் பார்ப்போம். முதலில் போலவரம் திட்டத்தின் கதை என்னவென்பதை ஆராய்வோம். டைம்மெஷின் கற்பனைகள் பிடித்தவர்கள் டைம்மெஷினில் பயணிக்கலாம். அது பிடிக்காதவர்கள் இதை ஒரு கதையாக , அதுவும் பிடிக்காதவர்கள் இதை ஒரு செய்தியாகப் படிக்கலாம். எதுவாக இருந்தாலும், நாம் சுதந்திர காலத்திற்கு முன்னர் இருந்து தொடங்க வேண்டும்.
அன்றைய ஆந்திரா, இன்றைய ஆந்திரா இல்லை. 1941யில் மெட்ராஸ் மாகாணத்தைச் சேர்ந்த திவான் பகதூர் எல். வேங்கடகிருஷ்ண ஐயர் தான் இந்தத் திட்டத்திற்கான விதை வித்திட்டவர். இவர்தான் கோதாவரி நதியில் ஒரு நீர்த் தேக்கத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் , அதற்கு ஏதுவான இடம் போலவரம் எனும் திட்ட அறிக்கை ஒன்றை அன்றைய பிரிட்டீஷ் அரசிடம் சமர்ப்பித்தார். இதற்கு "ராமபாத சாகர்" திட்டம் எனப் பெயரிட்டார். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகும் கோதாவரி, போலவரம் பகுதியில் தான் மலைப்பாதையை விட்டு சமதளத்திற்கு வருகிறது. இதன் காரணமாகத் தான் போலவரம் பகுதியை அவர் தேர்ந்தெடுத்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.எல். சாவேஜ் (S. L. Savage) தலைமையில், அன்றைய உலகின் மிகச் சிறந்த பொறியாளர்களான கார்ல் தெர்சாகி (Karl Terzagi) , ஹார்ப்பர் (Harper) , முர்டாக் மெக்டொனால்ட் ( Murdoch Macdonald )  ஆகியோரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்தது அன்றைய பிரிட்டீஷ் அரசாங்கம். ஆந்திராவில், கிருஷ்ணாவையும், கோதாவரியையும் இணைப்பதற்கான சாத்தியங்களை ஆராய்வது தான் இவர்கள் பணி. பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ,
" இருவேறு பாதைகளில் ஓடிக் கொண்டிருக்கும் நதிகளின் மடையை மாற்றுவது, மலைகளை உடைத்து அணையைக் கட்டுவது,  மூழ்கவிருக்கும் கிராமங்களை காலிசெய்வது போன்ற சில கடினமான வேலைகளைக் கடந்து, இந்த இரு நதிகளையும் இணைப்பது சாத்தியம் தான் " என்று அறிக்கைக் கொடுத்தனர்.
ஆந்திர அரசின் திட்டக் குறிப்புகளில் எந்த இடத்திலுமே வேங்கடகிருஷ்ண ஐயரின் பெயர் இடம்பெயரவில்லை. சாவேஜ் தான் இந்தத் திட்டத்தின் முன்னோடி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை, 1980ல் அறிவிப்பாக உருவெடுத்தது. அன்றைய ஆந்திர முதல்வர் தங்குத்ரி ஆஞ்சேயா இந்தத் திட்டத்தி��்கான அடிக்கல்லை நாட்டினார். ஆனால், எந்த முன்னெடுப்புகளும் எடுக்கப்படவில்லை. அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் போலவரம் குறித்துப் பேசப்படும். ஆந்திராவில் வறட்சி, வெள்ளம் என எது வந்தாலும் "போலவரம் மட்டும் வந்துவிட்டால் இந்தப் பிரச்னைகள் நம்மை நெருங்கவே நெருங்காது" என ஒட்டுமொத்த ஆந்திர மக்களும் தொடர்ந்து நம்ப வைக்கப்பட்டனர். இன்றும் அதே நம்பிக்கையில் தான் இருக்கிறார்கள்.
1980ல் தங்குத்ரி ஆஞ்சேயாவின் முயற்சிக்குப் பின்னர்,  24 வருடங்கள் கழித்து 2004ல் ராஜசேகர் ரெட்டி இந்தத் திட்டத்தை தூசு தட்டினார். "ராம பாத சாகர் " திட்டமாக இருந்த இது, இவரின் ஆட்சிக்காலத்தில் "இந்திரசாகர் திட்டம்" என்ற பெயர் மாற்றம் கண்டது. தொழில்நுட்ப ரீதியிலும், அரசியல் ரீதியிலும், பல துறைகளின் அனுமதி வாங்கும் வகையிலும் இந்தத் திட்டம் மிகவும் சிக்கலானது. ஆதலால், ரெட்டி ஒரு புதுத் திட்டத்தைத் தீட்டினார். போலவரம் நீர்த் தேக்க அணைக்கு முன்னர் அந்தத் தண்ணீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களை வெட்ட ஆரம்பித்தார். வலது முக்கிய கால்வாய் ( Right Main Canal ), இடது முக்கிய கால்வாய் ( Left Main Canal ) என இரண்டுக் கால்வாய்களை வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
Tumblr media
வலது முக்கிய கால்வாய்  ( Right Main Canal ) :
போலவரத்திலிருந்து 174கிமீ தூரம் ஓடும் இந்தக் கால்வாய் மேற்கு கோதாவரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணா மாவட்டத்திலிருக்கும் 3.2 லட்சம் ஏக்கருக்கு பாசன நீரை வழங்கும். மேலும், கோதாவரியிலிருந்து 80 டிஎம்சி நீரை கிருஷ்ணாவிற்கு திருப்பிவிடும். இதன்மூலம் 8 லட்சம் ஏக்கர் இந்த நீரைப் பயன்படுத்தலாம். (ஆந்திர அரசின் அதிகாரப் பூர்வத் தகவல்) .
இடது முக்கிய கால்வாய் ( Left Main Canal ) :
181.5 கிமீ தூரம் ஓடும் இந்தக் கால்வாய் கிழக்கு கோதாவரி மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டத்திலிருக்கும் 4 லட்சம் ஏக்கருக்குப் பாசன நீர் வழங்கும். மேலும், விசாகப்பட்டின நகரம் மற்றும் விசாகப்பட்டின ஸ்டீல் ப்ளாண்ட் ( Vishakapattinam Steel Plant ) ஆகியவற்றிற்கும் 23.44 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும்.  (ஆந்திர அரசின் அதிகாரப் பூர்வத் தகவல்) .
போலவரம்  பகுதியிலிருக்கும் பாப்பிகொண்டலா மலைத் தொடர்களை வெட்டி, அதன் மடியில்  ஒரு மிகப்பெரிய நீர் தேக்க அணையைக் கட்டுவது. 150 அடி உயரம் இருக்கும் அதில், பாய்ந்து வரும் கோதாவரி நீரை சேமித்து வைத்து, பின்னர் இடம் மற்றும் வலமாக வெட்டப்பட்டிருக்கும் கால்வாய்களில் புவி ஈர்ப்புச் சக்தியின் அடிப்படையில்  பாய்ச்சி, அதை ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவோடு இணைத்து ஆந்திராவின் மூலை முடுக்குகளுக்கும் நீரைக் கொண்டு சேர்ப்பது தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை என்று சொல்கிறது ஆந்திர அரசு.
1941யில் வேங்கடகிருஷ்ண ஐயர் இந்தத் திட்டத்திற்குத் தோராயமாக ஆறரைக் கோடி ரூபாய் செலவாகும் என்று சொல்லியிருந்தார். 2004யில் திட்டத்திற்கான மொத்த செலவாக 14 ஆயிரம் கோடீ ரூபாய் ஆகும் என்றது ராஜசேகர ரெட்டி தலைமையிலான அரசு. 2014யில் சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றவுடன் 40 ஆயிரம் கோடி இந்தத் திட்டத்தின் செலவு என்று அறிவித்தார்.  கடந்த மாதம் இறுதியாக மொத்த திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடிகள் செல்வாகும் என்று சொல்லியிருக்கிறார்.
இந்தக் கால்வாய் வெட்டும் பணிகளில் 80 சதவீத பணிகள் ராஜசேகர ரெட்டியின் காலத்திலேயே முடிக்கப்பட்டுவிட்டது. எதிர்பாராத விதமாக ராஜசேகர ரெட்டியின் மரணம், அதைத் தொடர்ந்து ஆந்திர அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், ஆந்திரா - தெலுங்கானா பிளவு என பல பிரச்னைகளின் காரணமாக இந்தத் திட்டம் கிடப்பிலேயே கிடந்தது. ஆந்திரா - தெலுங்கானா பிரிக்கப்பட்ட போது, மத்திய அரசாங்கம் போலவரம் நீர் இணைப்புத் திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்து, அதற்கான முழு செலவுகளையும் தானே ஏற்பதாக கூறியது. 2014ல் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றதும் மிக துரிதமாக இந்தத் திட்டத்தை முன்னெடுத்தார். அதுவும், தற்போது தேசிய நதிநீர் இணைப்பிற்கு 6 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள சூழலில் இந்தத் திட்டம் தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.
போலவரம் திட்டத்தின் பயன்கள் : ( ஆந்திர அரசின் குறிப்புப்படி )
1. 15.2 லட்சம் ஏக்கருக்கு பாசன நீர் வசதி. 2. 960 மெகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தி. 3. 540 கிராமங்களுக்கு குடிநீர் வசதி. 4. செயற்கை முறை மீன் வளர்ப்பு மற்றும் மீன் ஏற்றுமதிக்கான வசதிகள். 5. ஒடிஷா மாநிலத்திற்கு 5 டிஎம்சி, சட்டீஸ்கருக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும்.
அரசின் சாதனை அறிவிப்புகளை சில நிமிடங்கள் தொடர்ந்துப் படித்தால், இது போன்ற ஒரு ஆகச்சிறந்த திட்டம் இதுவரை உலகில் எங்குமே மேற்கொண்டதில்லை என்ற எண்ணமே மேலெழுகிறது. அரசின் அறிவிப்புகளைக் கடந்து கொஞ்சம் உற்று நோக்கினால் , களத்தில் நின்று பார்த்தால் எதிர்காலம் குறித்த பெரும் பயம் சூழ்கிறது.
நமக்கு, ஒரு வழியாக போலவரம் திட்டத்தைப் பார்வையிட அனுமதிக் கிடைத்தது. பாய்ந்தோடும் கோதாவரியின் மேல் கட்டப்பட்டிருக்கும் பாலங்களைக் கடந்து ரிப்பீட் மோடில் "கோதாவரி" படத்தின் பாடலைக் கேட்டபடியே வேகமாகப் போய்க்கொண்டிருந்தோம்.
" மிளகாயின் சிகப்பு கோதாவரிக்கு பொட்டு இட்டதாக அலங்கரிக்கிறது,   ராவணன் பொறுமையை இழந்து கடுங் கோபத்தில் பல்லைக் கடுத்துக் கொண்டிருக்கிறான்,   அவன் பார்வை சீதைக்கு என்ன சொன்னது ? அவன் கண்களில் சந்தேக மேகங்கள் சூழ்ந்திருந்தன,   இந்த தனிமையான இடத்தில் , ஓர் தனிமையான, இனிமையான  உணர்வு,   இதோ... இந்த கோதாவரியின் அலைகள் எள்ளி நகையாடுவது போல் இருக்கின்றன -    பசுமைப் போர்த்திய இந்த பாப்பிகொண்டலா மலையின் பச்சையை நீக்கமுடியாத காரணத்தால் ! "
இன்னும், இன்னும் இந்தப் பாடலில்  கோதாவரியின் அழகை வர்ணிக்கும் எத்தனையோ வரிகள் இருந்தன.
" இந்தத் தூய்மையான நதி , அந்த அடர்த்தியான மலையின் பக்கம் வளைந்து, நெளிந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தன்னைக் காத்து நிற்கும் நண்பனுக்கு நன்றி சொல்லியபடியே அந்த நதி அந்த மலைகளின் கால்களை வருடிப் பாய்கிறது. ஓர் ஆத்மார்த்தமான , அழிவில்லா நட்பிற்கான சாட்சியாய் அதன் உறவு இருந்தது..."
ஆனால், பாப்பிகொண்டலாவுக்கும் கோதாவரிக்குமான உறவை இத்தனை நாசம் செய்ய முடியுமா, இப்படியும் நாசம் செய்ய முடியுமா,  என்கிற அதிர்ச்சி போலவரம் திட்ட இடத்தைப் பார்க்கும் போது ஏற்பட்டது. இது வளர்ச்சியா? இது தான் வளர்ச்சியா? இதுவும் வளர்ச்சியா? இதுவா வளர்ச்சி? - போன்ற கேள்விகள் எழுந்தன. அதுவரை கோதாவரி ஆனந்தத்தில் ஆர்ப்பரித்து ஓடுவதாக தோன்றியது. ஆனால், தன் நண்பனின் இழப்பைத் தாங்கமுடியாது, அடக்க முடியா கண்ணீரில் அழுது கொண்டு தான் ஓடுகிறது என்பது புரிய ஆரம்பித்தது.
அத்தியாயம் -1
அத்தியாயம் -2
0 notes
darkerblisscraft-blog · 8 years ago
Text
"ஜெயலலிதா இல்லாத இடத்தில்..!?" - உருகும் நயினார் நாகேந்திரன்
Tumblr media
ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க-வில் செயல்பட விருப்பம் இல்லாததன் காரணமாகவே அக்கட்சியில் இருந்து விலகி, பி.ஜே.பி-யில் இணைந்ததாக முன்னாள் அமைச்சரான நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லை மக்களால் ‘பண்ணையார்’ என அழைக்கப்படுபவர் நயினார் நாகேந்திரன். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் பால் தொழிலில் கொடிகட்டிப் பறந்ததுடன், பால் பண்ணை நடத்தி வந்ததால் இந்தப் பெயர் அவருக்கு வந்தது. எம்.ஜி.ஆர் ரசிகரான இவர், ஜெயலலிதாவின் தீவிரமான விசுவாசியாக இருந்தார். சசிகலா குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார். சில வருடங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட அ.தி.மு.க-வில் கோலோச்சிய ’கானா’ என்று அழைக்கப்படும் கருப்பசாமி பாண்டியனின் விசுவாசத்துக்கு உரியவராகத் திகழ்ந்தார்.
மறைந்த ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கருப்பசாமி பாண்டியன் அ.தி.மு.க-வில் இருந்து விலகி தி.மு.க பக்கம் சாய்ந்தார். அப்போது இவரையும் தி.மு.க-வுக்கு அழைத்தார். ஆனால், இவர் அ.தி.மு.க-வில் தொடர்ந்து நீடித்ததுடன், கருப்பசாமி பாண்டியனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார். அதனால் 1991-ல் அவருக்கு நெல்லை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், வெற்றி பெற்றதும் ��வரே எதிர்பார்க்காத வகையில் அமைச்சர் பொறுப்பு தேடிவந்தது.
Tumblr media
தி.மு.க-வினருடன் நெருக்கம்!
மின்சாரம், போக்குவரத்து, தொழில் என பவர்ஃபுல் துறைகளில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாகவும் விசுவாசமாகவும் இருந்த நால்வரில் நயினார் நாகேந்திரனும் ஒருவர். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்த நயினார் நாகேந்திரன்மீது திடீரென ஜெயலலிதாவுக்கு அதிருப்தி எற்பட்டது. அதற்குக் காரணம், தி.மு.க ஆட்சியின்போது அக்கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுடன் ரகசியக் கூட்டணி அமைத்துத் தொழில்களில் ஈடுபடுவதாக ஜெயலலிதா சந்தேகித்தார். அதற்கேற்ப, அவர் ஹோட்டல் தொழிலை மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தினார்.
சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஹோட்டல்களில் ஒப்பந்தம்செய்து தொழில் தொடங்கினார். போக்குவரத்துக்குச் சொந்தமான நிலங்களைக் குத்தகைக்கு எடுத்தார். தி.மு.க-வினருடன் உள்ள நெருக்கம் காரணமாக நயினார் நாகேந்திரனை ஜெயலலிதா விலக்கத் தொடங்கினார். அதனால், 2011-ல் அவர் எம்.எல்.ஏ-வாக இருந்தபோதிலும் கடைசிவரையிலும் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவே இல்லை. 
எப்படியாவது அமைச்சராகிவிட வேண்டும் என்பதற்காகச் சசிகலா மூலமாக அவர் மேற்கொண்ட நடவடிக்கையை ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லை. இதனால் 2011-ல் அவரால் அமைச்சராக முடியவில்லை. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்காது எனப் பலரும் நினைத்தார்கள் (அவர் உள்பட). ஆனால், கடைசி நேரத்தில் சீட் கொடுக்கப்பட்டது. தொகுதி மக்களுடனான தொடர்பில் இருந்து விலகி இருந்த நிலையில், தேர்தலில் 606 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
அதன் பின்னர், அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். தொழில்களில் மட்டும் கவனம் செலுத்திவந்த அவர், அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் இருந்ததால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். சசிகலா பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதும் அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்து வந்த நயினார் நாகேந்திரன், கடந்த 26-ம் தேதி  டெல்லியில் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார். டி.டி.வி.தினகரனுடனும் நெருக்கமாகவும் இணக்கமாவும் பழகக்கூடிய அவர், திடீரென பி.ஜே.பி-யில் இணைந்தது அவருக்கு நெருக்கமான அ.தி.மு.க-வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tumblr media
பி.ஜே.பி-யின் பகீரத முயற்சி!
குமரி மாவட்ட நாடாளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி சார்பாகப் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றபோதிலும், அந்த மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. அத்துடன், தென் மாவட்டங்களில் கால் ஊன்றும் முயற்சியில் தீவிரம் காட்டும் பி.ஜே.பி-க்கு இதுவரை பின்னடைவே ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் தென் மாவட்டங்களில் பி.ஜே.பி-யில் மக்களுக்கு நெருக்கமான தலைவர்களே இல்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் மக்களிடம் செல்வாக்கு உள்ள தலைவர்களைக் கட்சியில் சேர்க்கும் முடிவை அமித்ஷா எடுத்தார்.
இதன்மூலம் சட்டமன்றத்தில் மட்டும் அல்லாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் உதவிகரமாக இருக்கும் என்பது அமித்ஷாவின் கணக்கு. இதற்காகவே கடந்த சில மாதங்களாக அக்கட்சியினர் தென்மாவட்டங்களில் முக்கியப் பிரமுகர்களைக் குறிவைத்து காய் நகர்த்திய நிலையில், நயினார் நாகேந்திரன் முதல் கட்டமாக அக்கட்சியில் இணைந்து இருக்கிறார். தென் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமுதாய மக்களைப் பி.ஜே.பி-க்குத் திருப்பும் வகையில், தே.மு.தி.க-வில் இருந்த கணேஷ்குமார் ஆதித்தன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் சேர்க்கப்பட்டார். தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களைப் பி.ஜே.பி-யை  நோக்கித் திருப்பும் வகையில் தற்போது அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவ��ுக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்கவும் அதன்மூலமாகத் தென் மாவட்டங்களில் கட்சியைப் பலப்படுத்தவும் பி.ஜே.பி மேலிடம் முடிவு செய்துள்ளது. அத்துடன், அவரது ஆதரவாளர்களைக் கட்சியில் சேர்க்கும் திட்டமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே டாக்டர் கிருஷ்ணசாமி பி.ஜே.பி-யுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இது தவிர மற்றொரு தலைவர் வெகுவிரைவில் அந்தக் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாகப் பேச்சு எழுந்துள்ளது. இவர்களின் மூலமாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரிடம் கட்சியைக் கொண்டு செல்ல முடியும் என்பது கட்சியினரின் முடிவாக உள்ளது. இது தவிர, அ.தி.மு.க-வில் நிலவும் குழப்பம் காரணமாக அக்கட்சியில் இருக்கும் தென் மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் சேர்க்கும் திட்டத்துடன் நயினார் நாகேந்திரன் களம் இறங்கி இருக்கிறார். அதனால் அ.தி.மு.க-வில் இருந்து பலர் விரைவில் பி.ஜே.பி-யில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tumblr media
''அம்மா இல்லாத கட்சியில் விருப்பமில்லை''!
நயினார் நாகேந்திரன் கூறுகையில்,  ’’நான் பி.ஜே.பி-யில் இணைந்ததும் ஏதோ புதிய கட்சியில் சேர்ந்தது போன்ற எண்ணமே எனக்கு இருக்கவில்லை. காரணம், அங்குள்ள அனைவருமே எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். அதனால் அவர்களோடு இணைந்து பணியாற்றுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. நான் எதையும் எதிர்பார்க்காமல்தான் அந்தக் கட்சியில் சேர்ந்திருக்கிறேன்.  
எம்.ஜி.ஆரும், அம்மாவும் இருந்த கட்சியான அ.தி.மு.க தற்போது மூன்று அணிகளாகப் பிரிந்து கிடக்கின்றன. அவர்களுக்குள் நடக்கும் இந்தச் சண்டையை நான் விரும்பவில்லை. அதுபற்றிக் கருத்துச் சொல்லவும் நான் ஆர்வம் காட்டவில்லை. எம்.ஜி.ஆரும் அம்மாவும் இல்லாத கட்சியில் இருக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால்தான் பி.ஜே.பி-யில் சேர்ந்தேன். என்னை இந்தக் கட்சிக்கு வருமாறு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பே பொன்.ராதாகிருஷ்ணன் அழைத்தார். அப்போது வரவில்லை. சற்று தாமதமானாலும் இப்போது வந்திருக்கிறேன்.
நான், பி.ஜே.பி-யில் சேர்ந்ததைப் பலரும் வரவேற்கிறார்கள். ஒரு சிலர் என்னிடம், ‘நீங்க இன்னும் ஒரு மாத காலம் பொறுத்திருந்து பார்த்துவிட்டுப் பிறகு பி.ஜே.பி-யில் சேர்ந்திருக்கலாம்’ என்று கருத்துச் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடி ஒரு மாதம் காத்திருந்தால், இந்தக் கட்சியில் என்னுடைய சீனியாரிட்டி போயிருக்கும். ஒரு சிலர், நான் தவறான முடிவை எடுத்திருப்பதாகச் சொன்னார்கள். அப்படிச் சொன்னவர்களிடமும் நான் நட்புடனேயே இருப்பேன் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். பி.ஜே.பி-யில் இருந்துகொண்டே இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்’’ என்றார் அக்கறையுடன்.  
0 notes
darkerblisscraft-blog · 8 years ago
Text
2017 ஹூண்டாய் வெர்னா காரின் ப்ளஸ், மைனஸ்! #hyundai #Verna
ஹோண்டா சிட்டி, மாருதி சுஸூகி சியாஸ், ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் ஆகிய கார்களுக்குப் போட்டியாக, முற்றிலும் புதிய வெர்னா மிட் சைஸ் செடானைக் களமிறக்கி உள்ளது ஹூண்டாய். இது ரஷ்யா (Solaris), கனடா (Accent), சீனா (Verna) ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இறுதியாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது மக்களே! மற்ற ஹூண்டாய் கார்களைப் போலவே, இதுவும் Fuidic Sculpture 2.0 டிசைன் கோட்பாடுகளின் படியே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் ப்ரொஜெக்டர் பனி விளக்குகள், அகலமான க்ரோம் க்ரில், LED டெயில் லைட், 16 இன்ச் டயமன்ட் கட் அலாய் வீல்களுடன், பார்ப்பதற்கு மினி எலான்ட்ரா போன்ற தோற்றத்தில் புதிய வெர்னா அசத்துகிறது.
Tumblr media
இதனுடன் காரின் அளவுகளிலும் (65 மிமீ கூடுதல் நீளம் - 29மிமீ கூடுதல் அகலம் - 30மிமீ கூடுதல் வீல்பேஸ் - 20 லிட்டர் பூட் ஸ்பேஸ்) மாற்றம் இருப்பதால், முன்ப��விட இடவசதி அதிகரித்திருக்கிறது. மேலும் பின்பக்க ஹெட்ரூம் 948மிமீ எனவும், ஃப்யூல் டேங்க் 45 லிட்டராகவும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. தவிர காரின் டெயில்கேட், பக்கவாட்டு விண்டோ லைன், பனி விளக்கு ஆகிய இடங்களில் செய்யப்பட்டுள்ள க்ரோம் வேலைப்பாடு, ரசனைக்குரியதாக அமைந்திருக்கிறது.
 புதிய வெர்னாவிற்குள்ளே நுழைந்தால், வெளிப்புறத்தைப் போலவே அதன் கேபினிலும் எலான்ட்ராவின் தாக்கத்தை உணர முடிகிறது. சென்டர் கன்சோல், ஏசி வென்ட்கள், ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றில் சில்வர் ஃப்னிஷ் ஜொலிக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் பிளே - மிரர் லிங்க் உடனான 7 இன்ச் IPS டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், Arkamys சவுண்ட் சிஸ்டத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறது.
Tumblr media
கூல்டு க்ளோவ் பாக்ஸ், Cluster Ionizer - Eco Coating உடனான கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, சன்ரூஃப், முன்பக்க Ventilated இருக்கைகள், பின்பக்க இருக்கைக்கான Curtain, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள் மற்றும் பின்பக்க இருக்கையின் ஹெட்ரெஸ்ட், ரிவர்ஸ் கேமரா, Electro-chromic மிரர், ரியர் ஏசி வென்ட், இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப், முன்பக்க - பின்பக்க இருக்கைகளுக்கான USB சார்ஜிங் பாயின்ட், Hands Free Smart Trunk என லக்ஸூரி கார்களில் காணப்படும் பல வசதிகளை, வெர்னாவில் சேர்த்துள்ளது ஹூண்டாய். ஸ்டீயரிங் வீலில் வாய்ஸ் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஆடியோ - ப்ளூடுத் கன்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஸ்டீயரிங் வீலை, இதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.
Tumblr media
இன்ஜின் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, அதே 1.6 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்களே இங்கும் தொடர்கின்றன; என்றாலும் ஹூண்டாய் இவற்றை அதிக பெர்ஃபாமென்ஸுக்காக ரி-டியூன் செய்திருக்கிறது. எனவே பழைய காரைவிடச் சுமார் 5% கூடுதல் மைலேஜை எதிர்பார்க்கலாம். ஆனால் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் மாடலில் இருந்த EBD, ESP, ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், Brake Energy Regeneration, Mild Hybrid போன்ற தொழில்நுட்பங்கள், இந்திய மாடலில் இடம்பெறாதது நெடுடல். 
இரண்டு இன்ஜின்களுக்கும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ளது. புதிய வெர்னாவின் கட்டுமானத்தில் 54.5% High Strength ஸ்டீல் மற்றும் Structural Adhesives இடம்பெற்றுள்ளதால், காரின் உறுதித்தன்மை முன்பைவிட 32% அதிகரித்திருக்கிறது.
Tumblr media
இதனுடன் ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷனும், சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புதிய வெர்னாவின் அனைத்து வேரியன்ட்களிலும் ABS, 2 காற்றுப்பைகள் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டிருப்பதுடன், டாப் வேரியன்ட்களில் கூடுதலாக ISOFIX, Impact Sensing டோர் லாக், Cornering வசதியைக் கொண்ட ஹெட்லைட், 6 காற்றுப்பைகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் இருப்பது ப்ளஸ். 2017 ஹூண்டாய் வெர்னாவின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகள், ஹோண்டா சிட்டி - ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ - ஸ்கோடா ரேபிட் ஆகியவற்றை விடக் குறைவாக இருந்தாலும், மாருதி சுஸூகி சியாஸை விட அதிகமாக இருக்கிறது! இந்த காரின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகள் பின்வருமாறு;
Tumblr media
1.6 லிட்டர், Gamma Dual VTVT, பெட்ரோல் இன்ஜின்: 123bhp பவர் மற்றும் 15.4kgm டார்க்
E MT - ரூ. 7.99 லட்சம் EX MT - ரூ. 9.06 லட்சம் SX MT - ரூ. 9.50 லட்சம் EX AT - ரூ. 10.22 லட்சம் SX (O) MT - ரூ. 11.09 லட்சம் SX (O) AT - ரூ. 12.24 லட்சம்
1.6 லிட்டர், U2 CRDi VGT, டீசல் இன்ஜின்: 128bhp பவர் மற்றும் 26.5 kgm டார்க்
E MT - ரூ. 9.20 லட்சம் EX MT - ரூ. 9.99 லட்சம் SX MT - ரூ. 11.12 லட்சம் EX AT - ரூ. 11.40 லட்சம் SX (O) MT - ரூ. 12.39 லட்சம் SX (O) AT - ரூ. 12.62 லட்சம்
0 notes
darkerblisscraft-blog · 8 years ago
Text
பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்புகளால், யார் யாருக்கு என்ன பலன்?
கடந்த இரண்டு மாதங்களாக '41 அறிவிப்புகள் வெளியிடுவேன்' என்றும், 'அந்த அறிவிப்புகளால் நாடே திரும்பிப் பார்க்கும்' என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் தெரிவித்துவந்தார். இதனால் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்புகள்குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்துவந்தது. நேற்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தில் 37 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். இவற்றை ஏழு வகைகளாகப் பிரித்திருக்கிறோம். ஒவ்வொரு பிரிவின் கீழ் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகியுள்ளன என்பதைப் பார்ப்போம்.
மாணவர் நலன் சார்ந்த அறிவிப்புகள்:
புதியதாக 30 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் புதுமைகளைப் புகுத���தி சிறப்பாகச் செயல்படும் நான்கு அரசுப் பள்ளிகளைக் கண்டறிந்து `புதுமைப் பள்ளி' விருது 1.92 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலுக்கான அட்டைகளை வாங்க 31.82 கோடி ரூபாய் செலவிடப்படும். 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினிவழிக் கற்றல் மையங்கள் அமைக்க 6.71 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும், நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் 5,639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 22.56 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். 31,322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 4.83 கோடி ரூபாய் செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
Tumblr media
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு 39.25 கோடி ரூபாய் செலவில் கற்றல் துணைக் கருவிகள் வழங்கப்படும் என்றும், திறனறித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு 2.93 கோடி ரூபாய் செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனித்திறமையோடு விளங்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று கோடி ரூபாய் செலவில் மேலைநாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், கலை, இலக்கியம் நுண்கலை உள்ளிட்ட 150 வகை பிரிவுகளில் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஒரு மாபெரும் மாணவர் கலைத் திருவிழா நான்கு கோடி செலவில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவிடும் வகையில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படும். ஒன்றிய அளவில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மேற்படிப்பு / வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வுகளுக்கு வழிகாட்டி மையங்கள் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். மேலும், கருத்தரங்குகள் இரண்டு கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஆசிரியர் நலன் சார்ந்த அறிவிப்புகள்:
4,084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாகச் செயல்படும் ஆறு ஆசிரியர்களுக்குக் கனவு ஆசிரியர் விருதும், 10,000 ரூபாய் ரொக்கப் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்க தொடர் நீட்டிப்பு கோரப்படும் 17,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என்றும், சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மின் ஆளுமை சார்ந்த அறிவிப்புகள்:
காணொளி பாடங்கள், கணினிவழித் தேர்வுகள், அலைபேசிச் செயலிகள் ��ள்ளடக்கிய கற்றல் மேலாண்மைத் தளம் இரண்டு கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். அரசுத் தேர்வுகள் இயக்ககச் செயல்பாடுகள் இரண்டு கோடி ரூபாய் செலவில் கணினி மயமாக்கப்படும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடங்க அனுமதி/ அங்கீகாரம்/ தொடர் அங்கீகாரம் வழங்க இணைய வழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நூலகத் துறை சார்ந்த அறிவிப்புகள்:
பொது நூலகங்களுக்கு 25 கோடி ரூபாய் செலவில் புதிய நூல்களும், அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு ஐந்து கோடி ரூபாய் செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ஆறு கோடி ரூபாய் செலவில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்.  
சிவகங்கை மாவட்டம் கீழடியில் சிந்துசமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த நூலகமும், தஞ்சாவூரில் தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் சார்ந்த நூலகமும், மதுரையில் நாட்டுப்புறக் கலைகள் சார்ந்த நூலகமும், திருநெல்வேலியில் தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகமும், நீலகிரியில் பழங்குடியினர் பண்பாடு சார்ந்த நூலகமும், திருச்சியில் கணிதம், அறிவியல் சார்ந்த நூலகமும், கோயம்புத்தூரில் வானியல், புதுமைக் கண்டுபிடிப்புகள் சார்ந்த நூலகமும், சென்னையில் அச்சுக்கலை சார்ந்த நூலகம் என்று தனித்தன்மை வாய்ந்த எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் எட்டு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
மாவட்ட மைய நூலகங்களில் போட்டித்தேர்வுப் பயிற்சி மையங்கள் 72 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். 123 முழுநேரக் கிளை நூலகங்களில் மின்னிதழ் வசதிகளுடன்கூடிய கணினி வசதி 1.84 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். இரண்டு கோடி ரூபாய் செலவில் நவீன மின் நூலகம் அமைக்கப்படும். அரிய வகை நூல்கள் மற்றும் ஆவணங்களைப் பொதுமக்களிடமிருந்து கொடையாகப் பெறும் திட்டம் தொடங்கப்படும். அரியவகை நூல்களைப் பாதுகாத்துவரும் தனியார் அமைப்புகள் நடத்திவரும் நூலகங்களுக்குப் பராமரிப்பு நிதி வழங்கப்படும். நவீன அறிவியல், தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் ஐந்து கோடி ரூபாய் செலவில் மொழிபெயர்க்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நிர்வாகம் சார்ந்த அறிவிப்புகள்:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் 60 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையின் அலுவலர்களுக்கு 2.89 கோடி ரூபாய் செலவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி சார்ந்த அறிவிப்புகள்:
மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு இணையான சமநிலைக் கல்வித் திட்டம் 13.94 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச அளவில் பரவியுள்ள தமிழர் நலன்:
உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் கற்பித்தலுக்குத் தேவையான தமிழ்ப் பாடநூல்கள் அனுப்புதல், சிறந்த தமிழாசிரியர்கள் மூலம் பயிற்சி மற்றும் இணைய வழியில் தமிழ் கற்பித்தல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தவும், உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் கொடையாக வழங்கப்படும். இதில் முதற்கட்டமாக, யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கும் மலேயாப் பல்கலைக்கழக நூலகத்துக்கும் ஒரு லட்சம் நூல்கள் கொடை என்று அறிவித்திருக்கிறார்கள்.
இந்தத் திட்டங்கள் குறித்து, கல்வியாளர்கள் சிலரிடம் கருத்துகளைக் கேட்டோம்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமி. சத்தியமூர்த்தி கூறியதாவது...
“தொடக்கப் பள்ளிகளில் புத்தகங்கள், வார இதழ்கள், தினசரி பத்திரிகைகள் வாங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் கல்வித் துறை அமைச்சர். இதனால் மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தவிர இதர விஷயங்களையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல விஷயமே. ஆனால், பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் சரியான முறையில் தினசரி செய்தித்தாள்களையும், இதழ்களையும் வாங்குகிறார்களா என்பது தெரியாது. இதைத் தவிர்க்கும்விதமாக அரசே நேரிடையாகப் பள்ளிகளுக்கு புத்தகங்கள், வார இதழ்கள், தினசரி பத்திரிகைகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் நாப்கின் எரியூட்டுதலுக்கு இயந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதும் சிறப்பு. தற்போது சுகாதாரமான முறையில் நாப்கின் அகற்றப்படாமல் சுகாதார பிரச்னையைச் சந்திக்கும்வகையில் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.
பள்ளிகளைக் கண்காணிக்க, கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாகன வசதி இல்லாமல் இருந்தது. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் பல பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லாமல் இருந்தார்கள். தற்போது வாகனங்கள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கியிருப்பதன் மூலம் இனி கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு அடிக்கடி ஆய்வுக்குச் செல்ல வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
கணினி வசதியை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இந்த நிதியில் பள்ளிகளில் வைஃபை வசதியையும் இணைய வசதியையும் ஏற்படுத்திட வேண்டும். மேலும், பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கிறார்கள். கணினி ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றமே. இனிவரும் காலங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
பள்ளியில் கழிப்பிட வசதி குறித்து பலரும் பேசிவருகிறார்கள். ஆனால், துப்புரவாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. மேலும், துப்புரவாளர்களுக்கு மாதச் சம்பளமாக 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது மிகவும் குறைந்த தொகை என்பதால், துப்புரவுப் பணிக்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதச் சம்பளமாக வழங்கப்படும் தொகையை அதிகரிக்க வேண்டும். இனிவரும் அறிவிப்புகளில் இதை வெளியிட்டால் கல்வித் துறை மேம்படும்" என்கிறார் சாமி. சத்தியமூர்த்தி.
`பொதுப்பள்ளிக்கான மாநில மேடை' அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவுடன் பேசினோம்.
"பள்ளிகளை மூடுவோம் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்குப் பதிலாக, 30 தொடக்கப் பள்ளிகளை ஆரம்பிப்போம் என்பதும், பள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் திட்டம், பள்ளிகளில் தினசரி செய்தித்தாள்கள், வார இதழ்கள், புத்தகங்கள் வாங்க வழி செய்திருப்பது எனப் பல அறிவிப்புகளும் வரவேற்புக்குரியவைதான்.
அரசுப் பள்ளிகள் `அருகாமை பள்ளிகளாக' அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் சார்ந்த வேலையோடு பல்வேறு பணிகளைக் கொடுக்கிறார்கள். இதனால் மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், கற்றல் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட, ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உடற்பயிற்சி ஆசிரியர், இசை ஆசிரியர், ஓவிய ஆசிரியர் பணிகளை நியமித்தல் குறித்த அறிவிப்பும் இல்லை. 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய ஆசிரியர் பணியிடங்கள் மறைந்துவிட்டன. இத்தகைய ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே சமமான கற்றலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இந்த அறிவிப்பில் `யோகாவைக் கட்டாயப்படுத்துவோம்' என்பதை எதிர்க்கிறோம். இது, தனிமனிதத் தேவையில் குறுக்கிடுவதுபோல் இருக்கிறது. குழந்தைகளின் மீது குறிப்பிட்ட ஒரு விளையாட்டையோ அல்லது செயல்பாட்டையோ திணிப்பது என்பதை அனுமதிக்கக் கூடாது. ஒரு கலாசாரத்தையோ, முறையோ திணிப்பது என்பது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.
ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தும் வேளையில் வெயிட்டேஜ் முறையைக் கொண்டுவந்தார்கள். இந்த முறை ஆசிரியர் தகுதித்தேர்வைத் தகுதியிழக்கச் செய்கிறது. 120 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காமல், 92 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்கிறது. குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி என நிர்ணயித்துவிட்டு, அதில் வெயிட்டேஜ் என்று பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணிலிருந்து கணக்கில் எடுத்துக்கொண்டு நிர்ணயிப்பது என்பது சரியான முறை அல்ல. இந்த வெயிட்டேஜ் முறை கைவிடுவதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. இந்த அறிவிப்புகள் எல்லாம் சேர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்கிறார்.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்னும் சில அறிவிப்புகளை சட்டசபையில் அறிவிப்பார் என, கல்வியாளர்கள் காத்திருக்கிறார்கள். இனிவரும் அறிவிப்புகள் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையையும் ஆசிரியர்களின் தேவைகளையும் பூர்த்திசெய்யுமா என்பதை, பொறுத்திருந்துப் பார்ப்போம்.
0 notes
darkerblisscraft-blog · 8 years ago
Text
கர்நாடகாவில் முழு அடைப்பு : போலீஸார் குவிப்பு!
கர்நாடக மாநிலத்தில், கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். கர்நாடக மாநில விவசாயிகளின் கடன���களை ரத்துசெய்யக் கோரியும் மேகதாது பிரச்னைக்கு தீர்வு காணவும் கோலார், சிக்காபல்லாபூர், தாவண்கரே மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களில் குடிநீர் பிரச்னைகளைத் தீர்க்கவும் வலியுறுத்தி, இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்த உள்ளனர்.  
Tumblr media
இன்று அதிகாலை, தமிழகப் பேருந்துகள் கர்நாடக-தமிழக எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டன. ஆனால், சிறிது நேரத்தில் தமிழகப் பேருந்துகள் கர்நாடக மாநிலத்துக்கு வழக்கம்போல இயக்கப்பட்டன. கர்நாடகா முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் சுமார் 15,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
0 notes
darkerblisscraft-blog · 8 years ago
Text
சி.டி, காலி பாட்டில்களால் சுற்றுச்சூழல் காக்க ஒரு ஆல்பம்! #Samhara
Tumblr media
சுற்றுச்சூழலுக்கு நாம் இழைத்து வரும் தீங்குப் பற்றி எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? எவையெல்லாம் தீங்கு என்பது பற்றிய போதிய அறிவு கூட நம்மில் பலருக்கும் இருப்பதில்லை. பெருகிவரும் மக்கள் தொகையாலும் தொழிற்சாலைகள் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சுழல் வெகுவாக பாதிப்படைகிறது. இது பற்றிய விழுப்புஉணர்வுக்காக ,ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 5 தேதி உலக சுற்றுச்சுழல் தினமாகக் கொண்டப்படுகிறது.
இன்று நாம் பயன்படுத்தும் பல பொருளின் பயன்பாடு நிறைவடைந்ததும் அதை நாம் தூக்கி எரிந்து விடுகிறோம். அவ்வாறு எரியப்படும் பல பொருட்கள் சுற்றுப்புறச்சூழலை எந்த அளவு பாதிக்கும் என்பதை நாம் நினைத்துகூட பார்ப்பதில்லை. இயற்கையில்  நஞ்சை விதைக்கிறோம் என்பதை கூட உணராமல்  பல்லாயிரக்கணக்கான வருடங்களாக செய்த தவறையே மீண்டும் செய்து வருகின்றோம். இன்று பலரும் தங்கள் பங்குக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க, பல வழிகளில் செயல்பட்டும், விழிப்புஉணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். குறிப்பாக பல தன்னார்வத் தொண்டு அமைப்புகள் இயற்கை பாதுகாப்பிற்காகவும், சுற்றுச்சூழல் மாசாகாமல் இருப்பதற்கும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்த வகையில் புதிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தி பல தொண்டு நிறுவனங்களை தங்கள் பக்கம் கவர்ந்து உள்ளது ஷட்டர்ஸ்பார்க்’ ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும்  சம்ஹாரா என்னும் படத்தொகுப்பு.
சம்ஹாரா என்பது அழிவு. நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் எவ்வாறு சுற்றுப்புறச்சூழலை அழித்து வருகின்றது என்பதை பிரபதிபலிக்கும் விதத்தில் இந்தப் புகைப்படத்தொகுப்பை வெளியிட்டு உள்ளனர்
Tumblr media
டிசைனர் காவ்யா ரெட்டி  என்பவரின் ‘தமாரா’ என்ற அமைப்புடன் இணைந்து ஷட்டர்ஸ்பார்க் ஸ்டூடியோஸ் இந்தப் புகைப்படத்தொகுப்பை தயாரித்துள்ளது. 'சம்ஹாரா’-வில் பிரபல மாடல்கள் பவித்ரா லஷ்மி, அபினயா நாராயணசாமி, பாவனா கத்ரி, ஷாலி நிவேகாஸ் மற்றும் ஷரோன் போன்றோர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் ஒவ்வொருவரின் உடைகளிளும் மனிதன் இயற்கைக்கு எதிராக தினமும் பயன்படுத்தும் பொருட்கள், சுற்றுச்சுழலுக்கு பெரும் அழிவை ஏற்படுத்துகிறது என்பதை குறிப்பிடும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதையே மிக சிறப்பாக பிரபலித்தும் இருக்கிறது ஷட்டர்ஸ்பார்க் ஸ்டுடியோ "சம்ஹாரா "படத்தொகுப்பு
Tumblr media
ஷட்டர்ஸ்பார்க்’ ஸ்டுடியோஸ் பற்றி :-
”மெக்கானிக்கல் இஞ்சினியர், கணினி வல்லுனர், மார்க்கெட்டிங் துறை அனுபவசாலி, டேட்டா அனாலிஸ்ட் மற்றும் வங்கி ஊழியர் என பல்துறை சார்ந்த வல்லுநர்களின் நட்பின் சங்கம் தான் இந்த ஸ்டூடியோ” என்றுகிறார்  ஷட்டர்ஸ்பார்க் ஸ்டுடியோஸின் உரிமையாளரும் மார்க்கெட்டிங் துறை அனுபவசாலியுமான அ��ைக்கப்பன்.
“இரண்டு ஆண்டுகள் முன் சென்னையில் நடத்த ஒரு ஃபோட்டோகிராபி பயிற்சி முகாமில் தான் நாங்கள் எல்லாரும் சந்தித்துக் கொண்டோம். எங்கள் ஐந்து பேருக்கும் புகைப்படக்கலை ரொம்ப பிடிக்கும். அது தான் எங்களை ஒன்று சேர்த்தது. வார இறுதிகளில் கேமரா கையுமாக ஐந்து பேரும் ஒனண்ணு சேர்ந்து போட்டோ எடுக்க புறப்படுவோம். ஒண்ணுமே எடுக்கலைனாலும் அந்த வீக் எண்டை கேமராவுக்கே அர்ப்பணிப்போம்.  இப்படியாக எங்கள் நட்பு தொடர்ந்தது. பின் நாங்க எல்லாரும் சேர்ந்து முகநூலில் எங்களுக்கும் என ஒரு தனிப் பக்கம் தொடங்க முடிவெடுத்தோம். பெயர் வைக்க ரொம்ப யோசித்து, பின் எங்கள் ஐந்து பேரின் முதல் எழுத்துகளை ஒன்றாக சேர்த்து ஸ்பார்க் (SPARK) என்று வைத்தோம். அதுவே "ஷட்டர்ஸ்பார்க்’ ஸ்டுடியோவாக உருவெடுத்தது. ஒரே மாதிரியான பணியில் போரடித்துப் போன நண்பர்கள் புதிதாக, சமூகத்துக்கு பயனுள்ளதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இந்த ஸ்டூடியோவை தொடங்கினோம்” என்கிறார்  அடைக்கப்பன் .
0 notes
darkerblisscraft-blog · 8 years ago
Text
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விரும்பும் சேவாக்...!
Tumblr media
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருப்பவர், முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே. அவரது பதவிக் காலம் தற்போது நடந்து வரும் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருடன் முடிவடைகிறது. எனவே பிசிசிஐ, அடுத்த பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, இங்கிலாந்தின் ரிச்சர்டு பிபஸ், இந்திய 'ஏ' அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் என்ற பலரும் இந்த முறை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அனைவரையும் ஆச்சர்யத்துக்குள் ஆழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விரேந்தர் சேவாக், இந்த பதவிக்கு விண்ணப்பித்ததுதான்.
முன்னவர்கள் போன்று சேவாக்குக்கு சர்வதேச அளவிலான அணிகளுக்குப் பயிற்சி கொடுத்த அனுபவம் இல்லை. ஐபிஎல் போட்டியில் விளையாடும் பஞ்சாப் அணிக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றியதைத் தவிர சேவாக்குக்கு வேறு அனுபவம் கிடையாது. ஆனால், அவர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
சேவாக் இந்திய அணி சார்பில், 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,586 ரன்களும், 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,273 ரன்களும் எடுத்தார். அதிரடி ஆட்டக்காரராகவும், ஆட்டத்தின் போக்கை எளிதில் மாற்றக் கூடியவராகவும் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அறியப்பட்டவர் சேவாக்.
0 notes
darkerblisscraft-blog · 8 years ago
Text
உலகப் புகழ் ’மஹாராஜா’ சொகுசு ரயில் தமிழகம் வருகிறது: அதிரவைக்கும் டிக்கெட் விலை
இந்திய ரயில்வே துறையின் கீழ் இயங்கும் உலகப் புகழ்பெற்ற ‘மஹாராஜா எக்ஸ்பிரஸ்’ சொகுசு ரயில், ஜூலை மாதம் தமிழகம் வரவுள்ளது.
Tumblr media
வட இந்தியாவில், உள்நாட்டுப் பயணி��ளுக்காக இயக்கப்பட்டுவரும் அதிநவீன சொகுசு ரயில்,  ‘மஹாராஜா எக்ஸ்பிரஸ்’. மும்பையிலிருந்து ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஆக்ரா என வட மாநிலங்களில் இயக்கப்பட்டுவந்த இந்த சொகுசு ரயில், முதன்முறையாக தென் இந்தியா வரவுள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி மும்பையிலிருந்து புறப்படும் மஹாராஜா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து காரைக்குடி, சென்னை, மைசூர், கோவா வழியாக மீண்டும் மும்பை திரும்பிவிடும். தங்கத்தட்டில் உணவுகள் பரிமாறப்படும் இந்த ரயிலில் பயணிக்க, முன்பதிவு துவங்கியுள்ளது.
இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மஹாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வதற்கான முழுக் கட்டணம், 5,00,680 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியில் மட்டும் பயணம் செய்வோருக்கு, 50 சதவிகித கட்டணச் சலுகையுடன் ஒரு பயணச்சீட்டில் இருவர் பயணிக்கும் வசதியுள்ளது. அதற்கான கட்டணம், 33,050 ரூபாய் ஆகும். இந்தக் கட்டணம், எட்டு நாள்களுக்கு உணவு, இடையில் நட்சத்திர விடுதிகளில் தங்குவது, பேருந்துக் கட்டணம், சுற்றுலாத்தலங்களின் நுழைவுக் கட்டணம் என அத்தனையும் இதில் அடங்கும்.
Source =  Viktan
0 notes
darkerblisscraft-blog · 8 years ago
Text
How to Keep Your Facebook Account Secure
The notification was a surprise. A friend on Facebook (really a business connection) had posted to my wall. I was intrigued! Then I read it: Im seriоus guys If yоu peоplе dоnt stop pоsting this оf mе I will be еrаsіng my accоunt. Sigh another hacker. My friend uses much better grammar than that!
I let him know hed been hacked and should not click the link (which he probably knew, but I would have felt awful if he had clicked it!). He thanked me and asked,  if you dont mind me consulting with you, whats the best way to prevent that from happening again?  Mind? I never mind a good question!
Tumblr media
1. Change Your Facebook Password
If you have been hacked, do it now! Use a password generator for ultimate complexity. If youre worried about remembering it, and your work/computing area is secure, write it down and stash it in a drawer for easy access.
There is some debate about the benefit of regular password changes. They might be more beneficial for sites such as Facebook, where someone with your login information might lurk for months before doing any damage (or might just be spying on you) than a banking site where a hacker is likely to act right away to get what hes after. Aim for every six months, or more frequent if someone gets hold of your computer or mobile device.
2. Enable Login Notifications
With Login Notifications, any time someone logs in to your account on a new device, you will be alerted by email or text message. To use:
Click on the gear icon to the right of your name.
Click Account Settings
Click Security
Click Login Notifications
Choose email or text notifications and save changes.
3. Enable Login Approvals
When someone attempts to use a new computer or mobile device to log in to your Facebook account, a code will be sent to your connected mobile phone. The login will not be allowed until the code is entered. To use:
Click on the gear icon to the right of your name.
Click Account Settings
Click Security
Click Login Approvals.
Facebook will walk you through setup if you do not already have a mobile phone on file.
4. Check Active Facebook Sessions
If you suspect you have been hacked, look your active sessions by:
Click on the gear icon to the right of your name.
Click Account Settings
Click Security
Click Active Sessions.
If you see something you dont recognize, end the session manually.  Be aware that not every unrecognized device is a hacker. You may have logged in on a friends computer or device, or there may be a device name you dont remember setting up. For instance, I noticed some sessions from Richardson, TX, but I live in Wilmington, NC. Hacker? Nope my mobile phone number is a Richardson, TX number. If you do end a session that is legit, dont worry, all you have to do is log back in.
Tumblr media
5. Turn on Secure Browsing
Have you noticed the httpS at the start of URLs on sites like PayPal, banking sites, or ecommerce sites? That means your data is encrypted and much harder to steal. You can enable this on Facebook, too.  Heres how:
Click on the gear icon to the right of your name.
Click Account Settings
Click Security
Click on the Secure Browsing section
Check the box provided and save your changes
6. Be Careful with Your Apps!
If an app looks spammy, it probably is. Run away! But even innocent and fun apps like Spotify and Candy-whatever can give hackers an extra chance to break in. Set up a one-time use password for your apps by going to
Click on the gear icon to the right of your name.
Click Account Settings
Click Security
Click App Passwords
Did You Lose Control of Your Facebook Business Page?
If your business page fell into the hands of a rogue ex-employee, you can try to reclaim it.  Learn how to reclaim your Facebook page here.
Choose Trusted Contacts
What if, after all these precautions, you lose your password and cannot access the email connected with your account? Hopefully youve chosen some trusted contacts who can help you reclaim your account. Heres how to set that up:
Go to your Security Settings
Click on the Trusted Contacts section
Click Choose Trusted Contacts
Choose 3-5 friends and confirm your choices
There are other ways you can protect your Facebook page, but these basic precautions should work in most cases. Have you had a Facebook privacy or security disaster? Tell us about it below!
0 notes
darkerblisscraft-blog · 8 years ago
Text
The End of Multi-Tasking, or How I Paid Attention to a Podcast for Once
I cant promise to give it up. Im terrible about multi-tasking and I know Im not alone. I cant tell you how many podcasts and webinars I have listened to while working on other projects. The result? I hear about half of it and remember next to nothing.
With the arrival of summer here in Wilmington, NC, I thought Id try something new something to force me to focus, if just for an hour a week. So, I tucked my iPad into its waterproof case, sprayed on the SPF70 and jumped into the pool to listen to a podcast.
Tumblr media
It worked great no distractions, no multi-tasking. Leaving the iPad on the deck, I couldnt even be tempted to check email or Facebook. I actually got some great ideas from the Social Media Examiner Podcast Why Things Catch On: The Science of Why People Share.
I find any kind of presentation that links psychology to marketing usually give me some great ideas. Though I cant think how to replicate the $1000 cheese steak example or Kit Kat and Coffee, it did give some ideas on using the principals that made those promotions successful.
Tumblr media
Word of mouth marketing can be highly effective AND cost-effective.  What makes people share? The webinar covered the first three steps in author and scientist Jonah Bergers six step framework (you can find the rest in his new book or on his website):
Social currency make people feel like insiders
Triggers find a way to stay top-of-mind
Emotion focus on feelings
Public create self-promoting products and services
Practical value make it useful
Stories sneak a moral or lesson inside a gripping tale
Really, my biggest takeaway was -stop multi-tasking and focus!
What works for you?
0 notes